*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Sunday, September 17, 2006

மோகினியின் தந்திரம் - ராசமணி-5

தனக்கு ஒரு துணை கிடைத்ததில் சுபத்ராவுக்கு சந்தோஷம். வந்தவள் அழகாகக் கூட்டி மெழுகினாள். சுவையாகச் சமைத்தாள். துணிமணிகளைத் துவைத்தாள். சுபத்ராவுக்கு நல்ல பேச்சுத் துணையாகவும், தோழியாகவும் இருந்தாள். ஆசான் வீட்டில் இல்லாதபோது அவர்கள் சந்தோஷமாகப் பேசிக்களித்து பொழுதைப் போக்கினர்.

அவள் வந்து மூன்று மாதங்கள் கடந்தன.

அன்று அமாவாசை. பக்கத்து கிராமத்தில் ஒரு பூசைக்கு போக வேண்டியிருந்தது. பகல் உணவு உண்டதும் ஆசான் சுபத்ராவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

அவர் கிளம்பிப்போனதும் சுபத்ரா அந்தப் பெண்ணிடம் தனக்குப் பேன் பார்த்துத் தரும்படி கேட்டாள். நிலைப்படியில் அமர்ந்தபடி அந்தப் பெண்ணும் சுபத்ராவுக்கு பேன் பார்த்துக் கொடுத்தாள். கொஞ்ச நேரம் கழிந்ததும் அவள் சுபத்ராவிடம் தனக்கும் தலையில் நிறைய பேன் என்று சொன்னாள். சுபத்ரா உடனே அவளைக் கீழே இருத்தி, தான் மேல் படியில் இருந்து கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினாள்.

சுபத்ரா அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நினைக்கவில்லை. அக்கம் பக்கத்தவருடன் பழகமுடியாத தனிமையில் தனக்கொரு உற்ற துணையாக வந்த அவளை அன்பிற்குரிய தோழியாகவே எண்ணினாள்.

சுபத்ராவின் கை அந்தப்பெண்ணின் தலைமுடியை அளைந்து பேன் தேடியபோது உச்சந்தலையில் ஏதோ அவள் விரல்களுக்குத் தட்டுப்பட்டது.

சுபத்ரா அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். என்னவென்று உணர முடியவில்லை. அதனால் அவளிடமே விசாரித்தாள். சமயம் பார்த்திருந்த லெச்சியும் அதை எடுத்து விடும்படி கேட்டுக்கொண்டாள். சுபத்ரா என்னவென்று அறியாமல் தன் கணவன் மந்திரக் கட்டிட்டு அறைந்து வைத்த ஆணியை லெச்சியின் தலையிலிருந்து பிடுங்கி எடுத்தாள்.

(கதை வளரும்)

No comments:

*