*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Thursday, September 21, 2006

நாகமணி கிடைத்தது - ராசமணி- 10

அவசரமாகப் பாய்ந்து டார்ச்சை எடுத்து அடித்தேன். சக்கரவர்த்தி படமெடுத்து சீறிக்கொண்டிருந்தது. படம் என்றால் அத்தனை பெரிய படம். நானும் எத்தனையோ பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதைப்போல....இல்லை.

காலநீட்டத்தில் சுருங்கிப்போன உடம்பாதலால் நீளம் அதிகமில்லை. ஆனால் அதன் படமோ விரிந்த பனை மரத்தை விடப் பெரிதாக இருந்தது.

கண்கள் தெரியாததால் அது எனக்கு நேராகச் சீறவில்லை. ஆனால் அது சீறிய ஒவ்வொரு தடவையும் அதன் வாயிலிருந்து ஆலகால விஷம் காற்றில் பறந்து சென்றது. அப்போதெல்லாம் மூச்சை அடக்கிக்கொண்டேன். முகத்தையும் திருப்பி நின்றேன்.

சுற்றிலும் திரும்பிச் சீறிய சக்கரவர்த்தி பனையை நோக்கி பயங்கர சீற்றத்தோடு மூன்று தடவை கொத்தியது.

அதன் பற்களும் தலையும் பயங்கரமாகச் சிதைந்தன. ஆனாலும் சீற்றம் தீரவில்லை. சீறவும் முடியவில்லை. பனையை இறுக்கிச் சுற்றிக்கொண்டு வேரோடு வேராகச் சாய்ந்தது.

இந்தப் பயங்கரமான காட்சியை பயத்தோடு பார்த்திருந்த நான் மெதுவாக சுய நினைவுக்கு வந்தேன்.
***
கிழவரின் வாக்குமூலம் மறுபடி இங்கே சற்று நின்றது. காரணம் பாம்பின் சீறலின் உச்சக்கட்ட விவரிப்பின்போது அங்கிருந்த பலரும் தங்கள் கால்களின் கீழும் சுற்றுமுற்றும் மரத்தடிகளையும் எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டனர். அது அவருக்கு தன் கதையின் நம்பகத் தன்மையை உணர்த்துவதாகத் தோன்றியது.

யாரும் எதுவும் பேசவில்லை. பனையேறி தானாகத் தொடர்ந்தார்.

"மெதுவாக எழுந்துபோய் சாணகம் சிதறியிருந்த இடத்தைப் பார்த்தேன். இப்போதும் பழைய நிதியின் நினைவு வந்தது. இதற்கும் ரத்தபலி வேண்டுமாவென தெரியாது. ஆனாலும் பாளை அரிவாத்தியை எடுத்து கையைக் கீறி சாணகத்தின் மேல் ரத்தத்தை தெளித்தேன். கவனமாக சாணகத்தை எடுத்து உருட்டிக்கொண்டு ஒரு பனையோலையில் பொதிந்தேன். நாகமணி இப்போதைக்கு வெளியே தெரிந்து விடக்கூடாது. சக்கரவர்த்தி மீண்டும் எழுந்து விடவும் கூடும்."

"அப்ப நாகமணி உமக்கு கெடச்சாச்சா? அத என்ன செஞ்சீரு?"

இளைஞர்கள் ஆவலோடு கேட்டகேள்விக்கு பனையேறியிடமிருந்து கொஞ்ச நேரம் பதிலே வரவில்லை. ஏதோ யோசனையில் இருந்த பனையேறி மெதுவாக

"ஆங்.. வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போன பிறகு ஒரு சட்டியில வெள்ளம் எடுத்து அதில சாணக உருண்டைய போட்டேன். சாணகம் வெள்ளத்தில் கரைஞ்ச போது அதனுள்ளேயிருந்து வெள்ளத்தில் ஒரு வெளிச்சம். மங்கிய சிவப்பு வெளிச்சம். சாணகத்தின் கறுப்பை மீறிய ஒரு ஒளி.

அதை வெளியில் எடுத்து கழுவி பார்த்த போது கண் கூசியது. அத்தனை பிரகாசம். அதை ஒரு கறுத்த துணியில் கட்டி வைத்துக்கொண்டேன்.

நாகரத்தினம் கிட்டி விட்டது. இனி அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. யாருக்கும் காட்டாமல் அதை ஓரிடத்தில் புதைத்து வைத்தேன்.

கொஞ்ச நாளாகவே நான் இரவில் வெளியே போவதும் பித்துப் பிடித்தமாதிரித் திரிவதும் பெண்டாட்டிக்கு ஏதோ சந்தேகம். அவள் கேட்டும் நான் ஏதும் சொல்லவில்லை.

நாகமாணிக்கத்தை என்ன செய்வது என்ற ஆலோசனையிலேயே கொஞ்ச நாள் போனது. அது கிட்டின பிறகு நான் பனையேறப் போகவில்லை. பலரும் வந்து கூப்பிட்டும் நான் போகவில்லை.

சக்கரவர்த்தி நாகத்தைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? என்று பார்த்தேன். யாருமே பேசவில்லை. அப்படி ஒரு அபூர்வ நாகம் செத்துக்கிடப்பதை யாரும் பார்க்கவில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது. அது பிறகு பயமாக மாறியது. அது பிழைச்சு எழுந்திருந்தால்... பாம்புகள் தேடிவந்து பழிவாங்கும் என்று சொல்லக் கேட்டிருக்கேன்.

பிறகு மெல்ல தைரியம் வந்து அந்த இடத்துக்கு போய் பார்த்தேன். நாகம் கிடந்த சுவடே தெரியவில்லை. யாரும் கண்டு எடுத்து வெட்டிப் பூத்தி இருப்பார்களோ என்னவோ தெரியாது.

நாகமணியை விற்பதா வேண்டாமா? எங்கே விறபது? எப்படி விற்பது என்றெல்லாம் யோசித்து தலை புண்ணானது. அதிலேயே கிறுக்குப் பிடிச்சது போல அலைஞ்சதில் பெண்டாட்டியும் அவள் அண்ணனுமாக என்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.

(கதை வளரும்...)

2 comments:

Anonymous said...

going very nice.

முகில் said...

சிறுவயதில் வாசித்த பேய்க்கதைகள்/பழங்கதைகள் ஞாபகம் வருகின்றன. தொடர்வதற்கு நன்றி.

*