*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Saturday, September 16, 2006

ராசமணி - 3

மாலை மயங்கும் நேரம் அவர்கள் மறுபடியும் சேர்ந்தார்கள்.

பெரியவர் கதையை ஆரம்பித்தார்.

“எனக்க இளவட்டப் பிராயத்தில நானும் நல்ல வாட்டசாட்டமா இருந்தேன். அப்பல்லாம் எதுக்கும், யாருக்கும் பயப்படுற சோலி கெடையாதும். எதுக்கும் துணிஞ்ச கை தான். ஊருல என்னம் பிரச்சினையானாலும் மின்ன நிப்பம். எவனையும் துணிஞ்சி அடிப்பம்.

அப்பத்தான் அக்கரையில இருந்து ஒரு பய இங்கத்த ஒரு பொண்ணப் பாக்க நெதம் ராத்திரி வாறதா தகவல் கெடச்சி. நாங்க நாலஞ்சி பேரு ஆருக்கும் தெரியாம ராத்திரி காவல் இருந்தம்.

அவம் ஆத்தக்கடந்து கரையேறினதும் சுத்தி வளச்சி அடிச்சோம். அவன் அத எதிர்பாக்காதனால கீழ விழுந்து எழிச்சி நின்னான். அதுக்குப் பெறகு ஒரு கறங்கு கறங்குனான். அதோட நானும் கூட உள்ள ரெண்டு பேரும் தூரப்போய் விழுந்தோம். திரும்ப நாங்க எழிச்சி வாறதுக்குள்ள அவன் வேகமா ஓடிப்போயிற்றான். எங்களுக்கு ஒடம்பு வலி தீர நாலஞ்சு நாளாச்சி.

ஒரு விசயம் எங்களுக்குப் பிடிபட்டுதுது. அவன் வர்மக்கலை அறிஞ்சவன். அதான் எங்கள மூணு பேரயும் ஒருசேர அடிச்சிட்டான். எங்களுக்கும் வேகம் வந்து அடிமொற படிக்க ஆசானத் தேடி அலைஞ்சோம்.

கடசீல எங்களுக்கும் ஒரு ஆசான் கிட்டுனாரு. அவரு ஆசான் மட்டுமில்ல. பெரிய மந்திரவாதி. மந்திரவாதமுஞ் செய்வாரு. செய்வினை, ஏவல் எடுப்பாரு. அவருக்கு அடிமொற அறுபத்திநாலுந் தெரியும். வர்மமும் களரியும் அத்துப்படி.

நாங்க போய்க் கேட்டதும் அவரு சம்மதிச்சிடல்லே. பெறவு பலநாள் நடையா நடந்து கடசீல அவரு மனசு இளகி சேர்த்துக் கிட்டாரு. நாங்க மூணுபேரு அடிவேல படிக்கச் சேந்தாலும் அவருக்க அடி பொறுக்காத மிச்ச ரெண்டுபேரும் ரெண்டு கிழமையில நிறுத்திடடானுவ. நான் மட்டும் தொடர போய் அவருகிட்ட வர்மமும் களரியும் படிச்சேன்.

அவருக்கும் எம்மேல ரொம்பப் பிரியம் வந்திட்டுது. அவருக்க மந்திரவாதங்களப் பத்தியும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சொல்லித் தந்தாரு.

அவரு ஒத்தக் கட்ட. தனிமையா வாழ்ந்தாரு. “ஆசான் ஏன் கல்யாணம் கட்டிக் கிடலை”ன்னு ஒரு நாள் நல்ல மனதையில இருக்கும்ப கேட்டேன். அப்பத்தான் அவரு ஒரு பயங்கரமான கதையச் சொன்னாரு.

(கதை வளரும்)

No comments:

*