*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Sunday, September 17, 2006

மோகினி வந்தாள் - ராசமணி - 4

பூவறத்து பூபாலன் ஆசானுக்க மகன்தான் எனக்க ஆசான் கோபாலன் ஆசான். தகப்பன் கிட்டயே சிஷ்யனா இருந்து எல்லா அடிவேலயும் மந்திரவாதவும் படிச்சாரு. பேருகேட்ட மந்திரவாதியா இருந்த தகப்பன் மகனுக்க தெறமைய பார்த்து சந்தோசப்ப்டாரு. மகனுக்கு கேரளத்துல பெண்ணு பாத்து கெட்டி வச்சாரு.

அந்தப் பெண்ணு சுபத்திரயும் நல்லபடி குடும்பத்தை நடத்தி கணவனையும் மாமனாரையும் நல்லா பாத்துக்கிட்டா."

பனையேறி கதையைக் கொஞ்சம் நிறுத்தி ஒரு முறுக்கானை எடுத்து வாயில் இட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்ன கதை இதுதான்.

அடிப்படையில தகப்பனுக்கும் மகனுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. பூபாலன் ஆசான் யாருக்கும் ஏவல் செய்வினை செய்யணும்னாலும் செய்து வைப்பார். ஆனா மகனோ யாருக்கும் கெடுதியாக செய்வினை செய்ய மறுத்து விட்டார். அவர் செய்வினை ஏவல் எடுப்பார். ஏற்கனவே பீடிக்கப் பட்டுள்ளவர்களை அதிலிருந்து விடுவிப்பதுதான் அது.

இப்படியான வேளையில் ஒரு தடவை தகப்பன் வைத்த ஏவலையே மகன் முறிக்க வேண்டி வந்தது. அன்றிலிருந்து தகப்பனும் மகனும் பகையாளியானார்கள். கோபாலன் ஆசான் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு தூரதேசம் போனார். காரணம் தகப்பனாரின் கோபம் அவருக்குத் தெரியும். அவர் தனக்கெதிராகவும் மந்திரப்பிரயோகம் செய்து ஏவல் விடக்கூடுமென அவர் எதிர்பார்த்தார். அதனால் தான் அவர் அங்கிருந்து போய்விட்டார்.

தகப்பனாரின் சுபாவம் அவர் அறிந்திருந்தபடியால் எங்கேயும் நிரந்தரமாகத் தங்கி இருக்க பயந்தார். ஒவ்வோரிடமாகக் கொஞ்சநாள் தங்கினார். இப்படி ஒரு தூரத்து அக்கரைக் கிராமத்தில் அவர்கள் தங்கியிருந்த போது மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

இனியும் அலைந்து திரிவது சரியல்ல என்று அங்கேயே ஓரிடத்தில் தங்கத் தீர்மானித்தார்.

ஆனாலும் அக்கம்பக்கத்தில் அதிகமாகப் பழக வேண்டாமென்று அவர் மனைவியை எச்சரித்திருந்தார்.

தான் இருந்த கிராமம் தவிர்த்து சற்று தூரத்திலுள்ள கிராமங்களில் தன் மந்திரவாதங்களைச் செய்து வந்தார். சில நம்பிக்கையான ஆட்களை அங்கே அவர் வைத்திருந்தார். அவர்கள் மூலமாக வரும் அழைப்புகளுக்கு மந்திரவாதம், ஏவல் செய்வினை எடுத்து (நீக்கி) விட்டு வருவார்.

அப்படி வர பெரும்பாலும் நள்ளிரவு ஆகி விடும். நடுநிசிகளில் காட்டுவழி வரும்போது மனைவி தனியாக இருப்பது நினைவுக்கு வரும். வேகமாக விரைவார்.

இம்மாதிரி ஒருநாள் ஒரு கிராமத்தில் ஏவல் எடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அது சரியாக நள்ளிரவு. அன்று அமாவாசை வேறு!

அவரது கையில் வெளிச்சத்திற்காக ஒரு சிறிய சூட்டுப் பந்தம் கொளுத்தி வைத்திருந்தார். நடந்து கொண்டிருந்தபோது பின்னால் கொலுசுச் சத்தம். திரும்பிப் பார்த்தார்.

வெள்ளுடை அணிந்த ஒரு பெண்ணுருவம். அவரது அருகே நெருங்கி வந்தது. அது அவரிடம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டது. அதுதான் லெச்சி என்னும் மோகினிப் பிசாசுகளின் லட்சணம்.

அவருக்கு உடனே புரிந்து விட்டது. வேறு யாருமென்றால் அங்கேயே ரத்தம் கக்கியிருப்பார்கள். ஆனால் அவரோ கைதேர்ந்த மந்திரவாதி. ஆனால் லெச்சி சாதாரண பேய்பிசாசுகளைப் போன்றதல்ல. மிகவும் எச்சரிக்கை தேவை. அவர் சூட்டுப் பந்தத்தை அணைத்துக் கீழே போட்டார்.

தன் பையிலிருந்து வசிய மையை எடுத்து மந்திரப்பிரயோகம் செய்தார். லெச்சி நடுங்கிக் கொண்டு முட்டு குத்தி அவர் முன் தலை குனிந்து நின்றாள். பையில் இருந்து ஒரு ஆணியை எடுத்து தன் கையைக் கீறி அதில் ரத்தம் தெளித்து அவள் உச்சந்தலையில் செருகி கல்லால் அடித்து இறக்கினார். லெச்சி அலறினாள். ஆனால் ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை.

கோபாலன் ஆசான் வீடு வந்து சேர்ந்தபோது அடங்கி ஒடுங்கிய பெண்ணொருத்தி அவர் பின்னே வந்தாள். கர்ப்பவதியான மனைவிக்குப் பணிவிடை செய்யும்படி அவளை அவர் அழைத்து வந்திருந்தார்.

No comments:

*