“என்ன வேய் சொல்லுதீரு? வல்லவனும் குடிச்சிட்டு வந்துருப்பாம். அவனுக்க பணத்த அடிச்சிட்டு தல்லுமுள்ளாயிருக்கும். எவனும் வசக்கேடா வச்சதில அடிபட்டு விழுந்திருப்பான். அல்லாத லெச்சியுமில்ல ஒண்ணுமில்ல.”
“இல்ல ஓய்! அப்பிடி இல்ல. இது லெச்சி தான். இதுக்கு மின்னயும் இது போல ரெண்டு பேரு செத்துக் கிடந்தினும். அதும் ரெத்தம் கக்கித்தான் கெடந்தினும். இதும் பாரும் வாயில ரெத்தம்.”
“வாயில ரெத்தம்னா லெச்சியா? என்ன ஓய்? இந்த இருவதாம் நூற்றாண்டில வந்து இப்பிடி மூட நம்பிக்கைல பேசுதீரு.”
“எலே எளவட்டப் பயலுவளா.. இருவதாம் நூற்றாண்டில லெச்சி வராதா? லெச்சிக்க சக்திய அறியாத பேசாதிய கேட்டியளா?” என்றார் செல்வராசுக்கு உதவிக்கு வந்த பெரியவர் செல்லப்பன். பனையேறி செல்லப்பன் என்றால்தான் வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும்.
“அம்மாச்சா..நீரு லெச்சிய கண்டிருக்கீரா.”
“கண்டிருக்கேனா? அது கூடப் பேசிட்டே வந்திருக்கேன்.” என்றார் பெரியவர்.
இளவட்டங்களுக்கு ஏதோ குஷி தோன்றியது. ‘இனி சந்தைக்கும் போக ஏலாது. பெரியவரை வளைத்துப் போட்டால் கொஞ்சம் சமயம் போகும்’ என்று தோன்றியது.
இதற்குள் போலீஸ் வந்து விட செல்வராசுவை அழைத்தார்கள். சவத்தை முதலில் பார்த்தவன் அவனல்லவா?
சம்பிரதாயங்கள் முடிந்து கொஞ்ச நேரத்தில் பிரேதத்தை போலீசார் எடுத்துப் போய் விட அங்கே கூட்டம் கலைந்தது.
இளவட்டங்களின் தூண்டுதலால் ஏதோ கதை பேச ஆரம்பித்த பெரியவர் பனையேறி செல்லப்பன் திடீரென நினைவு வந்தவராக “தம்பியளா..இப்பம் ஒரு சோலியாப் போறேன். வையிட்டு அந்தக் கலுங்குக்கு வாருங்க. லெச்சிக்க கதைய வெவரமாச் சொல்றேன்.” என்றார்.
அவர்கள் கலைந்தார்கள்.
(வளரும்)
1 comment:
நல்லா ஆர்வமாத்தான் இருக்கு படிக்க!
Post a Comment